Friday, September 23, 2011

எனக்குக் கிடைத்த சூப்பர் ஆப்பு!

நண்பர்களே, மிக நீண்டதொரு இடைவெளிக்குப்பின் எனது பதிவுகளை மீண்டும் தொடர்கிறேன்.

சென்ற பதிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனக்கு ஆப்பு வைத்ததை பற்றி குறிபிட்டுருந்தேன். அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான் படிக்கின்ற காலத்தில், ஓவ்வொரு பாடத்திலும் இரண்டு விதமான மதிப்பீடுகள் உண்டு. ஒன்று எப்போதும்போல் தேர்வு எழுதி அதில் பெரும் மதிப்பீடு. அதை எக்ஸ்டர்னல் மதிப்பீடு என்பர். மற்றொன்று அந்த பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரே அந்த செமஸ்டரில் மாணவரை மதிப்பீடு செய்து வழங்கும் இன்டர்னல் மதிப்பீடு. ஒரு பாடத்திற்கு மொத்தம் நூறு மதிப்பெண்கள், அதில் எக்ஸ்டர்னல் 75 சதவிகித மதிப்பெண்கள், இன்டர்னல் 25 சதவிகித மதிப்பெண்கள். ஓவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் எக்ஸ்டர்னலில் 35 மதிப்பெண்ணும், இன்டர்னலில் 10 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். இந்த இன்டர்னல் மதிப்பெண்ணை காட்டி பயமுறுத்தியே மாணவர்களை அழ அழ வைக்கும் புண்ணியவான்களும் உண்டு! ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் இன்டர்னலில் 22 அல்லது 23 மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள். இந்த இன்டர்னல் மதிப்பெண்களை ரெஜிஸ்டரில் பதிந்து பின்னர் அதை ஒரு மதிப்பெண் பட்டியலில் நகல் எடுத்து அனுப்பி வைக்கும் பணிக்கு பொதுவாக வேறு ஏதாவது துறையை சேர்ந்த மாணவரையே ஆசிரியர்கள் பணிப்பார்கள். இங்கேதான் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் சித்து வேலையை காட்டினார்கள். அந்த மாதிரி மதிப்பெண் நகல் எடுக்கும் மாணவரை எப்படியோ சரிகட்டி, என்னுடைய துறை தலைவர் பாடத்தில் இன்டர்னல் மதிப்பெண்ணை 24ல் இருந்து 4 ஆக நகலில் மாற்றி அனுப்பிவிட்டார்கள். இந்த தில்லுமுல்லை எனது துறை தலைவர் ஏனோ கவனிக்கவில்லை. ஒரே ஒரு மாணவனின் இன்டர்னல் மதிப்பெண் மிகவும் குறைவாக இருப்பதை எப்படி கவனிக்காமல் விட்டாரோ தெரியவல்லை. எல்லாம் என் நேரம் போல. நானும் எல்லா தேர்வுகளையும் நன்றாக செய்துவிட்ட மகிழ்ச்சியில் சென்னைக்கு எனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டேன். நான் சென்னையிலிருந்து திரும்புவதற்கும் தேர்வு முடிவுகள் வருவதற்கும் சரியாக இருந்தது. எங்கள் பாலிடெக்னிக்கில் தேர்வு முடிவுகளை நோட்டீஸ் போர்டில் போட்டு விடுவார்கள். அதில் இரண்டு லிஸ்ட்கள் இருக்கும். ஒன்றில் எல்லா பாடங்களிலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் இருக்கும். அதன் கீழே வெற்றி பெற்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று எழுதி தாளாளரும் பிரின்சிபாலும் கையெழுத்திடிருப்பார்கள். மற்றொன்றில் தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட பாடங்களிலோ தோல்வி அடைந்தவர்கள் பெயர்கள் இருக்கும்.

நான் வழக்கம் போல நாம் பாஸ் பண்ணி இருப்போம் என்ற இறுமாப்பில் நோட்டீஸ் போர்டை போய் பார்க்கவில்லை. கிளாசில் தெனாவெட்டாக அரட்டை அடித்துக்கொண்டிரேந்தேன். திடீரென்று எனது நண்பன் கந்தசாமி அடித்து பிடித்து ஓடி வருவதை கண்டேன். அவன் முகம் பேயறைந்தது போல் இருந்தது. தூரத்தில் இருந்தே ஏதோ கையை ஆட்டிக் கொண்டே வந்துகொண்டிருந்தான். அருகில் வந்தவன் என்னிடம் "ஏம்லே நோட்டீஸ் போர்டைப் பார்த்தாயா?" என்றான். "இல்லை மக்கா" என்றேன். என்னைக் கையோடு இழுத்துச் சென்று நோட்டீஸ் போர்டை காட்டினான். பார்த்தால் என் பெயர் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்டில்! வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பாடத்தில்லாவது தோல்வி அடையும் நண்பன் கந்தசாமி பெயர் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்கள் லிஸ்டில்! அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்த என்னிடம் கந்தசாமி கேட்டான் "என்னைப் போய் எப்படிலே பாஸ் லிஸ்டிலே போட்டாங்க?"


அன்பன்
கிராம்

Wednesday, October 14, 2009

திரு. ராமசுவாமியும் முதல் கணினி தேர்வும்

எப்படியோ நான் விரும்பிய துறை கிடைத்துவிட்டது.

அந்த வருடம் எங்கள் பாலிடெக்னிக்கில் புதியாதாக ஒரு கணினி வாங்கினோம். அதுவரை எங்கள் பாலிடெக்னிக்கில் மினி கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. அந்த வருடம் ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர் வாங்கினோம். வாங்கிய அன்றே எங்கள் துறை மாணவர்கள் அனைவருக்கும் திரு.ராமசுவாமி அவர்கள் ஒரு கணினி அறிமுக வகுப்பு நடத்தினார். அத்துடன் அன்று முதல் மாலையில் விருப்பப்பட்ட மாணவர்களுக்கு "பேசிக்" ப்ரோக்ரம் சொல்லியும் கொடுத்தார். அந்த வகுப்பில் முதலில் பதினெட்டு மாணவர்கள் இருந்தோம். ஒரே மாதத்தில் பலர் கழண்டுகொண்டனர். முடிவில் என்னையும் சேர்த்து ஆறு மாணவர்கள் மட்டுமே மிஞ்சினோம். இது என்னை போலவே எல்லா மாணவர்களும் கணினி கற்று கொள்ள ஆர்வமாய் இருப்பார்கள் என எண்ணிய எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இதிலும் ஒரு நன்மை இருக்கவே செய்தது. அதாவது எஞ்சிய எங்களுக்கு கணினியில் பயிற்சி எடுத்துக்கொள்ள அதிக நேரம் கிடைத்தது.

சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு திரு.ராமசுவாமி அவர்கள் எங்களுக்கு ஒரு தேர்வு வைத்தார். பேசிக்கில் ஒரு கொடியின் படம் வரைய ப்ரோக்ரம் செய்ய வேண்டும். என்ன கொடி? அது கம்யூனிஸ்ட்களின் அரிவாள் கொடி. ஆம். திரு. ராமசுவாமி அவர்கள் ஒரு வித்தியாசமான கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அவருக்கு கணினியும் பிடிக்கும். கம்யூனிசம்மும் பிடிக்கும்.
அவருடைய வழிகாட்டுதலில் ஆறே மாதங்களில் ப்ரோக்ரம் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டேன். நான்காம் செமஸ்டர் தொடங்கிய உடனே என்னை அவர் அவருக்கு உதவியாக அந்த கணினிகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வழங்கினார். இரண்டாம் ஆண்டிலேயே இந்த மாதிரி பொறுப்பை நான் பெற்றதில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பலருக்கு காண்டு. அவர்கள் எனக்கு ஒரு சரியான ஆப்பு வைத்தார்கள்!

அன்பன் கிராம்

Thursday, July 23, 2009

துறை மாறிய படலம்!

துணை பிரின்சிபால் இருக்கையில் எனதருமை ஆங்கில ஆசிரியர் அமர்ந்திருந்தார். எனக்கு அப்போது "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா ..." பழமொழி ஞாபகம் வந்தது. இந்த மனிதர் இங்கே எங்கு வந்தார் என்று யோசித்துகொண்டே, திரும்பிவிடலாமா என எண்ணினேன். அதற்குள் என்னை பார்த்துவிட்டார். "என்னலே இங்கே" என்றார். "ஒண்ணுமில்லே சார். துணை பிரின்சிபாலை பார்க்க வந்தேன்" என்றேன். "ஏலே அது நான் தாம்லே" என்றார்.

இது என்னடா நெல்லைக்கு வந்த சோதனை என்று நினைத்தவாறே எனக்கு துறை தவறாக ஒதுக்கபட்டிருப்பதாக கூறினேன். கோடை விடுமுறையில் அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்திருக்கும் போல. எல்லாம் என் நேரம். என்னுடைய ஆதங்கத்தில் சிறிது அழுத்தமாகவே கூறிவிட்டேன். அதை கேட்ட அவர் முகம் சிவந்துவிட்டது. திருவிளையாடலில் சிவாஜி என் பாட்டில் குற்றமா என்பது போல, உடனே மணி அடித்து உதவியாளரை கூப்பிட்டு என்னுடைய விருப்ப படிவத்தையும், துறை வாரி பட்டியல்களையும் எடுத்து வர சொன்னார். நானும் தருமி நாகேஷ் போல் நின்று கொண்டிருந்தேன். அவை வந்தவுடன் அவற்றை பார்த்தவர், "ஏலே முதல் முப்பது கோட்டியலில் நீயும் உண்டா? உன்ன மாதிரி இருபது கோட்டியல் எலக்ட்ரானிக்ஸ் கேகாம்லே. பின்னே மெக்கானிக்கல் துறைக்கு கொஞ்சம் நல்ல கோட்டியல் வேணுமின்னு உன்னை அங்க போட்டிருக்காக" என்றார். நான் உடனே எனக்கு மெக்கானிக்கல் படிக்க விருப்பம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இனி ஒன்றும் செய்ய இயலாது போ மெக்கானிக்கல் துறைக்கு என்று கூறிவிட்டார்.

நான் இதை விடுவதாக இல்லை. நேராக திரு.ராமசுவாமி அவர்களிடம் சென்றேன். நடந்ததை கூறினேன். அவர் வா என்னோடு என்று என்னை கூட்டிக்கொண்டு மீண்டும் துணை பிரின்சிபால் அறைக்கு சென்றார். என்னை மீண்டும் அங்கே பார்த்த ஆங்கில வாத்தியார்க்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. "என்னலே மறுபடி" என்றார். நான் பதில் சொல்லும் முன் திரு.ராமசுவாமி "சார் நீங்க கொஞ்சம் அந்த துறை பட்டியலை கொடுங்க" என்றார். உடனே ஆங்கில ஆசிரியர் "சார் இப்ப ஒன்னும் மாத முடியாது. எல்லாரும் சேர்ந்து தயாரித்த பட்டியல் இது. இனிமே மாற்றனும்னா தாளாளர் அனுமதி வேண்டும்." என்றார். திரு.ராமசுவாமி புன்னகைத்துக்கொண்டே, சரி சார் என்று சொல்லிவிட்டு பட்டியல்களை கையில் எடுத்து கொண்டு, என்னையும் கூட்டிக்கொண்டு நேராக தாளாளரின் அறைக்கு சென்றார். தாளாளரிடம் "சார் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட். இந்த பையனிற்கு மெக்கானிக்கல் துறை ஒதுக்கபட்டிருக்கு. இவனை என் துறைக்கு மாற்ற வேண்டும்" என்றார். தாளாளர் திரு.ராமசுவாமிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தவர். அவர் உடனே "தாரளமா செய்யலாமே. ஒரு வார்த்தை மெக்கானிக்கல் துறை தலைவரிடம் சொல்லிடுங்க" என்றார். உடனே திரு. ராமசுவாமி "ஒரு நிமிடம் உங்க போனை உபயோகித்து கொள்கிறேன் சார்" என்று கூறி உடனே மெக்கானிக்கல் துறை தலைவருக்கு போன் போட்டார். தாளாளர் போன் என்றவுடன் மெக்கானிக்கல் துறை தலைவர் நேராகவே அங்கு வந்துவிட்டார். விஷயம் சொன்னவுடன் அங்கேயே ஓகே பண்ணிவிட்டார். தாளாளர் ஓகே பண்ணிய பிறகு குழுவாவது மண்ணாங்கட்டியாவது. இப்படியாகத்தானே நான் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகுந்த சிபாரிசில் வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த ஆங்கில ஆசிரியர் வேண்டும் என்றே என் விருப்பத்திற்கு மாறாக என்னை மெக்கானிக்கல் துறைக்கு ஒதுக்கினார் என்றே தோன்றுகிறது. என்னை அவர் படுத்திய பாடு அப்படி.

அன்பன் கிராம்

Wednesday, July 22, 2009

கணினித் துறையில் முதல் கோணல் !!!

திரு .ராமசுவாமி என்னை எலக்ட்ரானிக்ஸ் பிரிவு எடுக்க சொல்லி இருந்தார். நானும் அவர் கூறியபடி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான் பாலிடெக்னிக்கில் படித்த காலத்தில் மெக்கானிக்கல் பிரிவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவிற்கும் தான் மிகுந்த கிராக்கி இருந்தது. தேர்வில் முதல் முப்பது ரேங்க் எடுக்கும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் துறையை எடுத்துகொள்ளலாம். மற்றவர்களுக்கு தர வரிசைப்படி மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரிகல் என்று துறை ஒதுக்கப்படும். இதற்காக ஒவ்வரு வருடமும் சில ஆசிரியர்களை கொண்டு ஒரு குழு அமைப்பார்கள். அதில் முதலாம் ஆண்டை சேர்ந்த சில ஆசிரியர்கள், எல்லா துறை தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைவராக பிரின்சிபால் அல்லது துணை பிரின்சிபால் இருப்பார். இவர்கள் ஒன்று கூடி மாணவர்களை துறை வாரியாக ஒதுக்குவர். ஒரு காலத்தில் மாணவர்களுக்கு துறை ஒதுக்குவதில் ஏற்பட்ட குழப்பங்களினாலும் அதனால் ஏற்படும் சச்சரவுகளை தவிர்க்கவும் இப்படி ஒரு ஏற்பாடு. எல்லாம் நமது நாட்டில் உள்ள காபினெட் முறை போல. இதிலும் வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் தில்லு முல்லு செய்ய எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.

மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறை கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். எலெக்ட்ரிகல் துறைக்கு ஒதுக்கப்பட்டவர்கள் தான் மிகவும் பாவம் செய்தவர்கள். அந்த துறையில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருத்த காலம்.

எப்படியோ நான் முதல் முப்பது ரேங்க்கில் வந்து விட்டேன். இரண்டாம் ஆண்டிற்கான விருப்ப படிவத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறை என்று எழுதி கொடுத்தும் விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த இரண்டாம் ஆண்டின் முதல் நாளும் வந்தது. பாலிடெக்னிக்கில் நுழைந்த உடன் நோட்டீஸ் போர்டில் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பட்டியலை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சி! எனது பெயர் எலக்ட்ரானிக்ஸ் துறை பட்டியலில் இல்லை. மெக்கானிக்கல் துறை பட்டியலில் என் பெயர் இருந்தது. கண்ணில் கண்ணீர் முட்ட ஓடினேன் பாலிடெக்னிக் அலுவலுகத்திற்கு.

அங்கு இருந்த உதவியாளரிடம் கேட்டதிற்கு துறை ஒதுக்கும் குழுவின் தலைவரை போய் பார்க்க சொன்னார். நானும் அவர் யார் என கேட்க, அது துணை பிரின்சிபால் என்றார். சரி என்று மாடி ஏறி துணை பிரின்சிபால் அறைக்கு சென்றால் ...


அன்பன் கிராம்

Thursday, June 18, 2009

முதல் கணினி அனுபவம் - நீ எல்லாம் எங்க உருப்படப் போற ? ... தெருவில்தான் நிற்க போற !

என்னுடைய முதல் கணினி அனுபவமே மிகவும் வித்தியாசமாய் நேர்ந்தது! நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு (எத்தனை மார்க் என்றெல்லாம் கேட்க கூடாது. அதான் முடித்துவிட்டேனே!) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் தட்டு தடுமாறி சேர்ந்து விட்டேன்.

"டேய் ! நீ எல்லாம் எங்க உருப்பட போற ? நேரம்னா உனக்கு என்னவென்று தெரியுமா ? இந்த பாலிடெக்னிக் எட்டு மணிக்கு ஆரம்பித்து விட்டது. நீ இடம் மாறி வந்திருக்கிறாய். நீ தெருவில்தான் நிற்க போற ! போடா போ !" என்ற இன்மொழிகளுடன் என்னுடைய பாலிடெக்னிக் வாசம் இனிதே ஆரம்பமானது ! விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை ! பாலிடெக்னிக் ஆரம்பித்த முதல் நாளே பத்து நிமிடம் லேட் ! அதற்காக எங்கள் ஆங்கில ஆசிரியரின் அன்பான அர்ச்சனை இது ! ஆனால் அவரது ஆசீர்வாதம் பலிக்கவே செய்தது ! பல வருடங்கள் வாடிக்கையாளர்களின் கணினிகளை பழுது பார்க்கும் பிரதிநிதியாகவும், விற்பனை பிரதிநிதியாகவும் வேலை பார்க்க நேர்ந்தது. அன்று என்னோடு லேட்டாக வந்து கம்பெனி கொடுத்த என் ஆருயிர் நண்பன் கந்தசாமி இன்று தன் குடும்ப நிறுவனத்தை நிர்வகித்து வருகிறான். நாங்கள் இருவரும் அன்று முதல் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு முடியும்வரை சேர்ந்தே இருந்தோம். அது என்னவோ தெரியவில்லை. அந்த ஆங்கில ஆசிரியருக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது.

எங்களுடைய பாலிடெக்னிக் ஊரை விட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அடிக்கடி பஸ் எல்லாம் கிடையாது. காலையில் ஒன்றிரண்டு டவுன் பஸ் பாலிடெக்னிக் வழியாக போகும். அது தவிர காலையில் ஏழரை மணி அளவில் எல்லா மாணவர்களையும் புளி மூட்டை மாதிரி அடைத்துக்கொண்டு ஒரு தகர டப்பா காலேஜ் பஸ் உண்டு. அதுவே மாலையில் நான்கு மணிக்கு மீண்டும் மாணவர்களை ரோட்டருகில் கொண்டு விடும். அப்படி அந்த பேருந்தை தவற விட்டுவிட்டால், "Staff பஸ்" எனப்படும் அடுத்த தகர டப்பா வரும். அதில் கெஞ்சி கூத்தாடி ஏறிகொள்ளலாம். என்ன அந்த ஆங்கில வாத்தியார் அங்கேயே மானத்தை வாங்குவார். "இவனெல்லாம் இப்படிதான் சார். உருப்படவே மாட்டான். முதல் கிளாஸ்க்கே லேட்டா வந்தவன் சார். சும்மா நடக்க விடுங்க சார்".

அந்த மாதிரி ஒரு நாள் டோஸ் வாங்கும் போது திடீரென்று ஒரு குரல் "போனா போகட்டும் சார். எல்லாம் வயசு சார். தன்னால திருந்திடுவாங்க" என்று. என்னால் நம்பவே முடியவில்லை. பார்த்தால் ஒரு நடுத்தர வயதுடைய ஆசிரியர் ஒருவர் எங்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். யார் என்று விசாரித்து அறிந்ததில் அவர் எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் தலைமை ஆசிரியர் என்றும் அவர் பெயர் ராமசுவாமி என்றும் தெரிந்து கொண்டேன். அன்று மதியம் அவருடைய டிபார்ட்மென்ட் பக்கம் சும்மா உலாத்தினேன். டிபார்ட்மென்ட் வாசலில் ஒரு ஓரமாக நின்று கொண்டு பசங்களோடு தம் அடித்து கொண்டிருந்தார். எனக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஒரு ஆசிரியர் தம், அதுவும் பசங்களுடன் என்னால் நம்பவே முடியவில்லை. என்னை பார்த்து "டேய் லேட் கோச் வா இங்கே" என்றார். என்னை அவருடைய அறைக்கு கூடி கொண்டு போனார். அறை முழுவதும் கம்யூனிஸ்ட் புத்தகங்கள், ஒரு ஓரத்தில் கார்ல் மார்க்ஸ் வாசகம். என்னைப்பற்றி விசாரித்திருப்பார் போல. என்னிடம் "ஏன் அடிக்கடி லேட்டாக வருகிறாய்? எங்கே இருந்து வருகிறாய் ?" என்றார். இதுவரை யாருமே என்னிடம் ஏன் லேட்? என்ன பிரச்சினை என்று கேட்டதில்லை. நான் அவரிடம் பாளையம்கோட்டையில் இருந்து வருகிறேன். சில நாட்கள் நேர் பஸ் லேட்டாக வருகிறது. பஸ் மாறி வருவதிற்கு அவ்வளவு வசதி கிடையாது என்று விளக்கினேன். அதை கேட்டவர் "சரி. என்னுடன் வா" என்று என்னை பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார். எனக்கு ஒரே உதறல். அதுவும் எங்கள் பிரின்சிபால் மிகவும் கண்டிப்பானவர். அங்கு சென்று எனக்காக பரிந்து பேசி எனக்கு பதினைந்து நிமிடம் வரை லேட்டாக வந்தால் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார். பிரின்சிபாலும் நல்ல மூடில் இருந்தார் போல. அவரும் "நெதைக்கும் லேட்டாக வரக்கூடாது. மத்தபடி பஸ் லேட் என்றால் பத்து நிமிடம் லேட் ஆனால் பரவாயில்லை" என்று பெரிய மனதுடன் ஒத்து கொண்டு ஆங்கில ஆசிரியரிடம் தான் அதை சொல்லுவதாக கூறினார். அன்று முதல் ராமசுவாமி சார் என்னுடைய தெய்வம் ஆனார்.

அன்று மாலையே அவருடைய ரூமிற்க்கு நன்றி சொல்ல போனேன். அவர் அங்கு இல்லை. அங்கிருந்த அடெண்டர் அவர் லேபில் இருப்பதாக சொன்னார். சரி என்று லேபிற்கு போனால் அங்கு ரூமில் பாதியை அடைத்துக்கொண்டு ஒரு டேப் ரிக்கார்டர் பெட்டி. பக்கத்தில் ஒரு டிவி பெட்டி. அதன் முன் ராமசுவாமி சார் உக்கார்ந்து கொண்டு ஏதோ டைப் அடித்து கொண்டிருந்தார். என்னை பார்த்தவர், என்னை அருகில் அழைத்தார். நானும் சென்று "நன்றி சார்" என்றேன். அதற்கு அவர் "பரவாயில்லை. நல்லா படிக்கணும். போயிட்டு வா" என்றார். சரி என்றவன் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவரிடம் "இது என்ன சார்" என்றேன் அந்த டிவி பெட்டியை காட்டி. அவர் அதற்கு இதுதான் கம்ப்யூட்டர் என்றார். உடனே நான் அவரிடம் "இது என்ன செய்யும் சார்" என்றேன். சிரித்தவர் "இது பல வேலைகள் செய்யும். ஒன்று செய். நீ செகண்ட் இயரில் எலக்ட்ரானிக்ஸ் மேஜர் எடு. நான் உனக்கு எதை பற்றி சொல்லி கொடுக்கிறேன். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் எடுக்க வேண்டுமானால் நீ தொண்ணூறு பெர்சென்ட் வாங்க வேண்டும். செய்வாயா?"என்றார். "செய்யறேன் சார்" என்று சொன்னேன். அன்று ஏற்பட்ட அனுபவம் என்னை கணினி துறைக்கு இழுத்து வந்து கிட்ட தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக விட மாட்டேன் என்கிறது. அவர் மட்டும் அன்று எனக்கு பரிந்து பேசி இரா விட்டால் நான் சிவில் துறைக்கு போய் இருப்பேன். மிகவும் நீண்டதொரு பதிவு இது. ஆனாலும் இந்த துறையில் நான் எப்படி நுழைந்தேன் என்று எழுதுவது முக்கியம் என கருதியதால் இந்த பதிவு.

அன்பன் கிராம்

என்னைப்பற்றி !

அன்பு வலைப்பூ நண்பர்களே சற்றே நெடிய பிரிவிற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன் !

என்னைப்பற்றி ...

நான் அமெரிக்காவில் வசித்து வருமொரு கணினி பொறியாளன். நெடு நாள் வலைப்பூ வாசகன். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். பலரும் வலைப்பூவில் தங்கள் அனுபவங்களை எழுதுவதை கண்டு என்னுடைய நீண்ட அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

நான் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் இந்தியாவில் கணினித்துறை சற்று காலூன்ற தொடங்கிய கால நிகழ்வுகள். அப்பொழுதெல்லாம் கணினி என்றால் சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் வசதி படைத்தவர்களும், பெரிய கம்பெனிகளிலும் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. என்ட்ரி லெவல் என்று சொல்ல கூடிய கணணிகளே பல லட்சங்களுக்கு விற்று கொண்டிருந்த காலம் அது. அச்சமையத்தில் நான் ஒரு "Field Sales & Support Engineer", அதாவது கணினி விற்கும், சேவை செய்யும் பொறியாளனாக இருந்தேன். அதனால் பல பெரிய மனிதர்களுடன் பழகவும் அவர்களை அறிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவுகளில் அவற்றில் மிக சுவையான, வித்தியாசமான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள எண்ணம்.என்னுடைய கன்னி முயற்சிக்கு தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் கிராம்



Sunday, March 2, 2008

எழுத்தாளர்கள் சுஜாதா, ஸ்டெல்லா ப்ரூஸ் மறைவிற்கு அஞ்சலி !

தமிழ் வாசகர்களுக்கு கடந்த வாரம்தான் எத்தனை பேரிழப்பு !

தனது எளிய நடையில் பல விஞ்ஞான அறிவியல் கதைகள் எழுதி, தமிழ் மக்களை பெரிதும் கவர்ந்தவர். தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் திரு சுஜாதா. அவரது மறைவு இன்னும் நம்ப முடியவில்லை ! அவரின் கணேஷ் வசந்த் கதைகளை யாரால் மறக்க முடியும். அந்த ஜீனோவே நேரில் வந்து அவரை திருப்பி கொடுக்க வேண்டும்.

பட்ட காலிலே படும் என்பது போல, சுஜாதா அவர்களின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திரு. ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களின் தற்கொலை செய்தி. நடிகர் திலகத்தின் சோதனை மேல் சோதனை பாட்டுதான் ஞாபகம் வருகிறது. எப்படிப்பட்ட எழுத்தாளர் ! ஆண் பெண் நட்பை எவ்வளவு நளினமாய் கையாண்டவர். அவரா தற்கொலை முடிவெடுத்தார் ? ஓர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு இவ்வளவு வறுமை கொடுமையா ? அவரது வாசகர்கள் நாம் எல்லோருமே சேர்ந்து அவரை கை விட்டு விட்டோமோ ? மிகவும் வேதனையான விஷயம்.

அவர்கள் இருவரின் ஆத்மா சாந்தி அடைய என் அப்பன் குறுக்குதுறை முருகனை ப்ரர்த்திகிறேன்.

தமிழ் கதை உலகில் சுஜாதா அவர்களும், ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களும் எழுதி வந்த காலம் மிகவும் பொன்னானது. அது நிஜமாகவே ஒரு கனா காலம் !

அன்பன்
கிராம்