Thursday, July 23, 2009

துறை மாறிய படலம்!

துணை பிரின்சிபால் இருக்கையில் எனதருமை ஆங்கில ஆசிரியர் அமர்ந்திருந்தார். எனக்கு அப்போது "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா ..." பழமொழி ஞாபகம் வந்தது. இந்த மனிதர் இங்கே எங்கு வந்தார் என்று யோசித்துகொண்டே, திரும்பிவிடலாமா என எண்ணினேன். அதற்குள் என்னை பார்த்துவிட்டார். "என்னலே இங்கே" என்றார். "ஒண்ணுமில்லே சார். துணை பிரின்சிபாலை பார்க்க வந்தேன்" என்றேன். "ஏலே அது நான் தாம்லே" என்றார்.

இது என்னடா நெல்லைக்கு வந்த சோதனை என்று நினைத்தவாறே எனக்கு துறை தவறாக ஒதுக்கபட்டிருப்பதாக கூறினேன். கோடை விடுமுறையில் அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்திருக்கும் போல. எல்லாம் என் நேரம். என்னுடைய ஆதங்கத்தில் சிறிது அழுத்தமாகவே கூறிவிட்டேன். அதை கேட்ட அவர் முகம் சிவந்துவிட்டது. திருவிளையாடலில் சிவாஜி என் பாட்டில் குற்றமா என்பது போல, உடனே மணி அடித்து உதவியாளரை கூப்பிட்டு என்னுடைய விருப்ப படிவத்தையும், துறை வாரி பட்டியல்களையும் எடுத்து வர சொன்னார். நானும் தருமி நாகேஷ் போல் நின்று கொண்டிருந்தேன். அவை வந்தவுடன் அவற்றை பார்த்தவர், "ஏலே முதல் முப்பது கோட்டியலில் நீயும் உண்டா? உன்ன மாதிரி இருபது கோட்டியல் எலக்ட்ரானிக்ஸ் கேகாம்லே. பின்னே மெக்கானிக்கல் துறைக்கு கொஞ்சம் நல்ல கோட்டியல் வேணுமின்னு உன்னை அங்க போட்டிருக்காக" என்றார். நான் உடனே எனக்கு மெக்கானிக்கல் படிக்க விருப்பம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இனி ஒன்றும் செய்ய இயலாது போ மெக்கானிக்கல் துறைக்கு என்று கூறிவிட்டார்.

நான் இதை விடுவதாக இல்லை. நேராக திரு.ராமசுவாமி அவர்களிடம் சென்றேன். நடந்ததை கூறினேன். அவர் வா என்னோடு என்று என்னை கூட்டிக்கொண்டு மீண்டும் துணை பிரின்சிபால் அறைக்கு சென்றார். என்னை மீண்டும் அங்கே பார்த்த ஆங்கில வாத்தியார்க்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. "என்னலே மறுபடி" என்றார். நான் பதில் சொல்லும் முன் திரு.ராமசுவாமி "சார் நீங்க கொஞ்சம் அந்த துறை பட்டியலை கொடுங்க" என்றார். உடனே ஆங்கில ஆசிரியர் "சார் இப்ப ஒன்னும் மாத முடியாது. எல்லாரும் சேர்ந்து தயாரித்த பட்டியல் இது. இனிமே மாற்றனும்னா தாளாளர் அனுமதி வேண்டும்." என்றார். திரு.ராமசுவாமி புன்னகைத்துக்கொண்டே, சரி சார் என்று சொல்லிவிட்டு பட்டியல்களை கையில் எடுத்து கொண்டு, என்னையும் கூட்டிக்கொண்டு நேராக தாளாளரின் அறைக்கு சென்றார். தாளாளரிடம் "சார் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட். இந்த பையனிற்கு மெக்கானிக்கல் துறை ஒதுக்கபட்டிருக்கு. இவனை என் துறைக்கு மாற்ற வேண்டும்" என்றார். தாளாளர் திரு.ராமசுவாமிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தவர். அவர் உடனே "தாரளமா செய்யலாமே. ஒரு வார்த்தை மெக்கானிக்கல் துறை தலைவரிடம் சொல்லிடுங்க" என்றார். உடனே திரு. ராமசுவாமி "ஒரு நிமிடம் உங்க போனை உபயோகித்து கொள்கிறேன் சார்" என்று கூறி உடனே மெக்கானிக்கல் துறை தலைவருக்கு போன் போட்டார். தாளாளர் போன் என்றவுடன் மெக்கானிக்கல் துறை தலைவர் நேராகவே அங்கு வந்துவிட்டார். விஷயம் சொன்னவுடன் அங்கேயே ஓகே பண்ணிவிட்டார். தாளாளர் ஓகே பண்ணிய பிறகு குழுவாவது மண்ணாங்கட்டியாவது. இப்படியாகத்தானே நான் எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகுந்த சிபாரிசில் வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த ஆங்கில ஆசிரியர் வேண்டும் என்றே என் விருப்பத்திற்கு மாறாக என்னை மெக்கானிக்கல் துறைக்கு ஒதுக்கினார் என்றே தோன்றுகிறது. என்னை அவர் படுத்திய பாடு அப்படி.

அன்பன் கிராம்

No comments: